இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா திடீர் ராஜினாமா!

இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா பதவியில் இருந்த நிலையில் திடீரென அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2018 ஜனவரி மாதம் இந்திய தேர்தல் ஆணையராக அசோக் லவாசா நியமிக்கப்பட்டார். வரும் 2022 ஆம் ஆண்டு வரை அவருக்கு பதவி காலம் உள்ளது. இந்த நிலையில், திடீரென கடந்த மாதம் அவரை ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக உள்ள திவாகர் குப்தா ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற உள்ளதையடுத்து, அந்த பதவிக்கு அசோக் லவாசா நியமிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து அசோக் லவாசா ராஜினாமா செய்துள்ளார். இந்திய ஜனாதிபதி மாளிகைக்கு அவர் ராஜினாமாவை அனுப்பியுள்ளதாகவும், ஜனாதிபதி மாளிகை அவர் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பதவியில் இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
வரும் செப்டம்பர் மாதம் அசோக் லவாசா ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது