14 ஆண்டுகளுக்கு முன் திருடு போன பர்ஸ் திரும்ப கிடைத்த அதிசயம்

மும்பையில் 14 ஆண்டுக்கு முன் புறநகர் ரயிலில் பயணம் செய்த ஒருவரின் பர்ஸ் திருடு போனது. அதனை உரிய நபரிடம் தற்போது ரயில்வே போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து பன்வெல் பகுதிக்கு புறநகர் ரயிலில் ஹேமந்த் படல்கர் என்பவர் பயணம் செய்தபோது தனது பர்ஸை பறிகொடுத்துள்ளார். பர்ஸ் காணாமல் போனது தொடர்பாக ரயில்வே போலீசாரிடம் அப்போது புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரலில் ஹேமந்த் படல்கரை போனில் அழைத்த, ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர், தொலைந்து போன பர்ஸை கண்டுபிடித்து விட்டதாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் ஹேமந்தால் அதை வாங்க செல்ல முடியவில்லை. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர்,பன்வெல் ரயில்வே போலீசார் அலுவலகத்துக்கு சென்று ஹேமந்த் பர்ஸை திரும்ப பெற்றுள்ளார்.
அந்த நேரத்தில் எனது பர்ஸில் ரூ. 900 இருந்தது. அதில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டும் அடங்கும். ரயில்வே போலீசார் என்னிடம் ரூ.300 திருப்பி அளித்தனர். ரூ.500ஐ புதிதாக மாற்றி திருப்பி தரப்படுமென கூறினர். ரயில்வே போலீசார் அலுவலகத்துக்கு சென்ற போது ஏராளமானோர் திருடப்பட்ட தங்களது பணத்தை சேகரிக்க வந்திருந்தனர் என ஹேமந்த படல்கர் கூறியுள்ளார்.