மும்பை துறைமுகத்தில் சிக்கிய ரூ.ஆயிரம் கோடி போதைப்பொருள்!

ஆப்கானிஸ்தானிலிருந்து பைப்புகளில் அடைத்து கப்பலில் மும்பைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருளை வருவாய் புலனாய்வு துறையினர் கைப்பற்றினர்.
கப்பலில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் மும்பைக்கு கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நவி மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தில் தீவிர அலசல் நடந்தது.
அப்போது ஆப்கானிஸ்தானிலிருந்து பைப்புகளில் அடைத்து 191 கிலோ போதைப் பொருளை இருவர் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு கிலோ ரூ.5 கோடி ஆகும். மொத்த மதிப்பு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
கடத்தி வந்த இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தில் 14 நாள் நீதிமன்ற காவலில் எடுத்துள்ளனர். அவர்களிடம் மும்பையில் இந்த போதைப் பொருள் கடத்தலில் யாருக்கெல்லாம் பங்கு என்பது குறித்து விசாரணை நடக்கிறது.