தொடரும் சாதிய பாகுபாடு.. ஊராட்சி மன்ற தலைவரை தரையில் உட்கார வைத்த கொடுரம்!!

பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி பெண் தலைவரை தரையில் அமர வைத்து ஊராட்சி மன்ற கூட்டம் நடந்த சம்பவம் புவனகிரியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திட்சை ஊராட்சி. இந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்த ராஜேஷ்வரி. துணை தலைவராக மோகன்ராஜ் பதவி வகிக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் தரையில் அமர்ந்திருக்கும் ராஜேஸ்வரியின் புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
6 உறுப்பினர்களை கொண்ட இந்த ஊராட்சியில் தலைவர் ராஜேஸ்வரி மட்டுமே பட்டியல் வகுப்பை சேர்ந்தவர். அந்த ஒரே காரணத்திற்காக பல்வேறு சாதிய அடக்குமுறைகள் அவர் மீது கடைபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெகுநாட்களாகவே பல்வேறு சச்சரவுகள் கிளம்பி வந்த நிலையில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஸ்வரியை தவிர்த்து மீதம் இருக்கும் அனைவரும் சேரில் அமர்ந்திருக்க அவர் தரையில் அமர வைக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலர் சிந்துஜா ஆகியோர் மீது ராஜேஸ்வரி புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், இவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஊராட்சி செயலாளர் பொறுப்பு வகித்த சிந்துஜாவை, மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.