தனிமைபடுத்துதல் முகாமில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் அர்னாப் கோஸ்வாமி..

கட்டட உள் அலங்கார வடிவமைப்பாளர் தற்கொலை வழக்கில் கைதான ‛ரிபப்ளிக் டிவி’ தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, தனிமைபடுத்துதல் முகாமில் இருந்து மும்பையில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். தனிமை முகாமில் அவர் மொபைல் போன் பயன்படுத்தியதாக விசாரணை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தின் அலிபாக் பகுதியை சேர்ந்தவர் கட்டட உள் அலங்கார வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயாரும், கடந்த 2018 ல் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது, அவர் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது. அதை தராமல் அவர்கள் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த அலிபாக் போலீசார், கடந்த நவ.,4ம் தேதி ‛ரிபப்ளிக் டிவி’ உரிமையாளரும், தலைமை செய்தி ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி மீது தற்கொலைக்கு தூண்டியது உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அர்னாப் , தாக்கல் செய்த இடைக்கால ஜாமின் மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. மேலும், அவர் ஜாமின் கேட்டு கீழமை நீதிமன்றத்தை அணுகவும் உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை , அலிபாக்கில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட தனிமைபடுத்தும் முகாமில் போலீசார் வைத்திருந்தனர். இந்நிலையில், அவர் நேற்று (நவ.,08) நவி மும்பையில் உள்ள தலோஜா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். தனிமைபடுத்துதல் முகாமில் இருந்த அர்னாப் கோஸ்வாமி, சிலரின் மொபைல் போனை வாங்கி பயன்படுத்தியதாகவும், நீதிமன்ற காவலில் இருந்து கொண்டு சமூக வலைதளங்களில் செயல்பட்டு வந்ததாக ராய்காட் குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி ஜமால் ஷேக் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த வழக்கில் விசாரணை அதிகாரி என்ற முறையில், தனிமைபடுத்துதல் முகாமில் அடைக்கப்பட்டுள்ள அர்னாப் கோஸ்வாமிக்கு எப்படி மொபைல் போன் கிடைத்தது? யார் அவருக்கு கொடுத்தார்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அலிபாக் சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதினேன். இதனனையடுத்து, இன்று காலை அவர், தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார்.