7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கில், காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!!

உ.பி அலிகர் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 7 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் அச்சிறுமியின் தந்தையை தவறாக நடத்தியதற்காக காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உ.பியின் ஹத்ராஸில் உள்ள சாதாபாத்தில் தனது தந்தையுடன் வாழ்ந்து வந்தவர் 7 வயது சிறுமி. இவர் அருகிலுள்ள அலிகர் மாவட்டத்தில் உள்ள பகத் பதோர் கிராமம் சென்றிருந்தார். இங்கு வாழும் தனது சித்தி விட்டில் அச்சிறுமி தங்கி இருந்தார். இவரை சித்தியின் 14 வயது மகன் கடந்த செப்டம்பர் 21இல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அந்த 14 வயது சிறுவன் உடனடியாகக் கைது செய்யப்பட்டான். இப்பலாத்கார சம்பவத்தால் அச்சிறுமி படுகாயமடைந்திருந்தார்.
இதனால், அருகிலுள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு அச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது ஈமச்சடங்கை செய்ய மறுத்த அச்சிறுமியின் தந்தை, இக்லாஸ் காவல்நிலைய ஆய்வாளர் பிரவீன் குமார் மான் மீது புகார் கூறினார். விசாரணையின் போது அவர் தம்மிடம் தவறாக நடந்ததாகவும், இதனால் ஆய்வாளரை பணிநீக்கம் செய்யவும் நிபந்தனை விதித்தார். வேறுவழியின்றி, ஆய்வாளர் பிரவீன் குமாரை, அலிகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், தமிழருமான ஜி.முனிராஜ், ஆய்வாளரை பணியிடைநீக்கம் செய்துள்ளார்.
இதன் பிறகு இன்று காலை அச்சிறுமியின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. ஹாத்ரஸ் சம்பவத்திற்கு பின் பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிப்பதில் உபி போலீஸார் அதிக கவனம் செலுத்தத் துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.