பள்ளி ,கல்லூரிகள் திறப்பு குறித்து என்ன நிலவரம்…

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் கல்வி நிலையங்களை திறந்தால் நிலைமை விபரீதமாகும் என்று அஞ்சப்படுகிறது. அதேசமயம் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்திடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதம் தொடங்கும் போதும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் அறிவிப்பு வெளியாகுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் தொடர்ச்சியான வதந்திகள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. 

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் பல்வேறு மாநில அரசுகளும் பாடத்திட்டங்களை குறைத்துள்ளன. பள்ளிகள் திறப்பைப் பொறுத்தவரை மாநிலங்கள் தங்களின் வைரஸ் பரவல் நிலையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கத் திட்டமிட்டுள்ளன.  

அதன்படி, தலைநகர் டெல்லியில் வரும் 30ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்களின் அறிவுரைப்படி பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனைகள் பெற்று வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் 21ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 50 சதவீதம் பள்ளிகளுக்கு வருகை புரியலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அசாம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் தற்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளன. 

அரியானா மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களில் 85 சதவீதம் பேர் நடப்பு மாதத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்று வலியுறுத்தியிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கேரள மாநிலத்தில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x