ஊரடங்கினால் ஜூலையில் மட்டும் 50 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது

ஜூலை மாதத்தில் மட்டும் 50 லட்சம் பேருக்கு வேலை பறிபோயுள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
சி.எம்.ஐ.இ., எனப்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; பெருந்தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கினால் மார்ச் முதல் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. அதன் பிறகு 1.8 கோடி மாத சம்பளதாரர்கள் வேலையிழந்துள்ளனர். மாத சம்பளதாரர்களை கொண்ட முறையான துறையில் வேலையிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொருளாதார மீட்சி குறித்த சந்தேகத்தை கிளப்புகிறது.
இந்தியாவில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 21% பேர் மாத சம்பளம் பெறுபவர்கள். முறைசாரா துறையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை விட இது மிகக் குறைவாக இருந்தாலும், நாட்டின் ஜி.டி.பியில் இவர்களது பங்களிப்பு அதிகம். முறைசாரா துறையில் ஏப்ரலிலிருந்து வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் மாத சம்பளம் பெறுபவர்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாதது கவலையை உண்டாக்கியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1.7 கோடி பேர் நாடு முழுவதும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். ஆனால் ஜூலையில் 50 லட்சம் பேருக்கு வேலை போயுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.