“தான் பாஜகவில் இணைய உள்ளதாக வரும் செய்தி வதந்தி” – குஷ்பூ விளக்கம்

தான் பாஜகவில் இணைய உள்ளதாக வதந்தி பரப்பப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் பெண் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நியாயம் கேட்டு காங்கிரஸ் தரப்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி பெரம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது, “உங்களிடம் கேள்வி எதுவுமே கேட்கக்கூடாதா? ரஃபேல் குறித்தும், கோவிட் குறித்தும், ஜிஎஸ்டி குறித்தும், பணமதிப்பிழப்பு குறித்தும் கேள்வியே கேட்கக் கூடாது என்கிறீர்களா? ஏன் கேட்கக்கூடாது? ஏன் அப்படி ஒரு பயம்.
கொரோனா பேரிடர் காலத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர், எத்தனை தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று கேட்டால் உச்சநீதிமன்றத்தில் தங்களிடம் டேட்டா இல்லை என்கிறார்கள். இப்படிப்பட்ட அரசாங்கம் இந்தியாவில் உள்ளது.
அமித்ஷா நலம்பெற ட்வீட் போட்டால் நான் பாஜகவில் இணையவுள்ளதாக வதந்தியை பரப்புகிறார்கள். பிரதமர் விரைவில் பதில் சொல்லும் காலம் வரும். மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.