லெபனானில் பயங்கர குண்டுவெடிப்பு – 73 பேர் பலி

லெபனான் நாட்டில் பயங்கர சத்தத்துடன் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், 73 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசிய நாடான லெபானின் தலைநகர் பெய்ரூட் நகரில், நேற்றிரவு பயங்கர சத்தத்துடன் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தையடுத்து அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் குலுங்கின.

மேலும், நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது. சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தீ பற்றி எரிந்தன. பல கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள வீடுகளின் கண்ணாடிகள் நொறுங்கின. பெய்ரூட் நகரமே அதிர்ந்து புகைமூட்டமாக காணப்பட்டது.
இந்நிலையில், துறைமுகத்தில் பழைய வெடி பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதையடுத்து சில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில், 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.