போதை ஆசாமியால், போலீசார் உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா!

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தின் அடூர் நகரத்தை சேர்ந்தவர், கடந்த 3ம் தேதி, துபாயில் இருந்து வந்தார். துபாயிலிருந்து வந்ததால், அவருக்கு கொரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது.
விடுதி மாடியொன்றில் தனிமைப்படுத்தப்பட்டார். வந்த இரண்டாவது நாளே அவருக்கு, மது குடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. தன் நண்பர்களை செல்போனில் அழைத்து, மது வாங்கிக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். நண்பர்கள், மது பாட்டில்களை வாங்கி, கயிற்றில் கட்டி அனுப்பியுள்ளனர்.
அனைத்தையும் குடித்த அந்நபர், போதை தலைக்கேறியதும் சத்தம்போட்டு, பிரச்னை செய்துள்ளார். மேலும், தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு திறக்க மறுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார், கதவை உடைத்து அவரை மீட்டு, பத்தனம்திட்டா மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் முன்னதாக அவருக்கு செய்யப்பட்டிருந்த பரிசோதனை முடிவு இன்று வந்தது. அதில், அவருக்குக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால், அவரை மீட்ட போலீசாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவருக்கு மது பாட்டில்களை வாங்கிக் கொடுத்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் என, 20க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.