“காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார்!” காங்கிரஸ் கமிட்டி முடிவு!!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சித்தலைமை விவகாரம் தொடர்பாக இன்று ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற விவாதத்தின் முடிவில், அக்கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து, தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி பதவி விலகினார். இதனையடுத்து இடைக்கால தலைவராக சோனியாகாந்தி நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று ஓராண்டை கடந்து விட்ட நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்கும் திறமையுள்ள தலைமை தேவை என ஒரு பிரிவினர் கடிதம் எழுதினர்.
எனவே, இன்று ஒரு நாள் முழுவதும் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் கட்சித்தலைமை விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின் நிறைவில் பேசிய சோனியா காந்தி, கட்சித்தலைமை தொடர்பாக சில தலைவர்கள் அனுப்பிய கடிதம், பொதுவெளியில் கசிந்த நிகழ்வு, தம்மை காயப்படுத்தியதாக தெரிவித்தார். மேலும், கட்சியில் இதுவரை நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும். இனி அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அடுத்த 6 மாதங்களில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூடி புதிய தலைவரை தேர்வு செய்யும் என்றும் அதுவரை கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே நீடிக்க வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டதாக ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் பி.எல். பூனியா தெரிவித்தார்.
உள்கட்சி விவகாரங்களை ஊடகங்களில் விவாதிக்காமல் கட்சிக்குள் மட்டுமே விவாதித்து ஒழுங்கை கடைப்பிடிக்கவும் காரிய கமிட்டி வலியுறுத்தியுள்ளது.