உலக சுகாதார நிறுவனத்திற்கு காட்டமான கடிதம் எழுதிய பாண்டே..?

உலக சுகாதார நிறுவன இணைய பக்கங்களில் இருக்கும் இந்திய வரைபடத்தில் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் தனியாக சித்தரிக்கப்பட்டிருப்பதற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா.,விற்கான இந்திய பிரதிநிதி இந்திராமணி பாண்டே ஒரு காட்டமான கடிதம் எழுதியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோமிற்கு எழுதியுள்ள அக்கடிதத்தில் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
“உலக சுகாதார நிறுவன இணையதளங்களில் இந்தியாவின் எல்லைகளை தவறாக சித்தரித்து வரைபடம் உள்ளது.
இயக்குனர் என்ற முறையில் உடனடியாக தலையிட்டு அவ்வரைபடங்களை நீக்க வேண்டும். சரியான வரைபடங்களை மாற்றியமைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார். முன்னதாக இந்திய தூதரகம் இது தொடர்பாக இரண்டும் கடிதம் அனுப்பியுள்ளதையும் அதில் நினைவுப்படுத்தியுள்ளார்.
வரைபட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு எழுதப்படும் 3-வது கடிதம் இதுவாகும். கடந்த டிச., 30 மற்றும் ஜன., 3 ஆகிய தேதிகளிலும் இவ்விவகாரம் உலக சுகாதார நிறுவன இயக்குனர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக தனியார் ஆங்கில செய்திச் சேனல் ஒன்று நிறுவன அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது.
அதற்கு “ஐ.நா.,வின் சிறப்பு நிறுவனமான நாங்கள் அதன் வழிகாட்டுதல்கள் படியே வரைபடங்கள் வெளியிட்டியிருக்கிறோம்” என கூறி பொறுப்பை ஐ.நா., மேல் போட்டுவிட்டது.