பாஜக கட்சியில் இணைய ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள்… போலீஸை கண்டதும் தெறித்து ஓட்டம்.!

பாரதிய ஜனதா கட்சியில் இணைய ஆயுதங்களுடன் வந்த ரவுடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
வண்டலூர் ஓட்டேரி விரிவு பகுதியில் மாற்றுத் திறனாளி, நரிக்குறவர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பாஜக சார்பில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொண்டர்களைப் போல சில ரவுடிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலை அடுத்து, ஓட்டேரி போலீஸார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாரை கண்டவுடன் சில ரவுடிகள் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 6 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதனால் போலீஸார் அவர்களின் வாகனங்களை ஆய்வு செய்தனர். அதில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததால், அவர்களை ஓட்டேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்ததில் ருக்மனந்தன், யுகா ஆதித்யன், சரத்குமார், ஜோசப் பெஞ்சமின், அன்பரசு, பிரபாகரன் ஆகியோர் எனத் தெரியவந்தது. மேலும் தாங்கள் பாஜக-வில் இணைய வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் காவல்துறையினரின் கிடுக்குப்புடி விசாரணையில் அவர்கள் பிரபல ரவுடியான நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளிகள் என்று தெரிவித்து உள்ளனர். பிரபல ரவுடி சூர்யா பா.ஜ.க. வில் இணைய வந்ததாகவும் அப்போது ஒரு தரப்பினர் இணைக்க கூடாது எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா தனது கூடடாளிகளோடு திட்டத்தோடு நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பாஜக-வில் இணைய வந்த 6 பேரையும் விடுவிக்கக் கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.