பிரசாந்த் பூஷன் குற்றவாளி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நீதித் துறையையும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளையும் விமர்சித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளையும், தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவையும் விமர்சித்து, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், கடந்த ஜூன் 27 மற்றும் 29-ம் தேதிகளில், இரு ட்வீட்களை பதிவிட்டிருந்தார்.
புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலையை, உச்சநீதிமன்றம் முறையாக விசாரிக்கவில்லை எனவும், இந்தியாவில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு உச்சநீதிமன்றத்தின் கடந்த நான்கு தலைமை நீதிபதிகளே காரணம் எனவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இது தொடர்பான விசாரணையின்போது, பிரசாந்த் பூஷன் தனது பதிவுகளை நியாயப்படுத்தும் வகையில் வாதிட்டார். இவ்வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் தொடர்பான விசாரணை, வரும் 20-ம் தேதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.