வெடி விபத்து: பதவியை ராஜினாமா செய்த லெபனான் பிரதமர்

லெபனான் நாட்டில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டு பிரதமர் ஹசன் டெய்ப் ராஜினாமா செய்தார்.
மேற்காசிய நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில், 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2 ஆயிரத்து 750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள், கடந்த 4-ம் தேதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில், 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில், 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்தனர்.

வெடி விபத்திற்கு லெபனான் அரசின் அலட்சியம் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், உடனடியாக அரசு பதவி விலக வேண்டும் என்று பெய்ரூட் நகர் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

வெடி விபத்து சம்பவத்தையடுத்து, லெபனான் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் ஹசன் டெய்ப் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது அமைச்சரவையும் கூண்டோடு பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.