மொரீஷியஸில் விபத்துக்குள்ளான கச்சா எண்ணெய் கப்பல் – இந்திய கேப்டன் கைது!

மொரீஷியஸ் நாட்டில் ஜப்பானின் கச்சா எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளாகி ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்து சுற்றுச்சூழல் சீர்கெட்டது. இது தொடர்பாக அந்த கப்பலின் இந்திய கேப்டனை கைது செய்துள்ளனர்.
ஜூலை மாதம் 25ம் தேதி ஜப்பானின் எம்.வி.விகோசியோ கப்பல், மொரீஷியஸ் தென்கிழக்கு கடல் பகுதியில் பவளப் பாறை திட்டில் மோதி விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்த 4000 டன் கச்சா எண்ணெயில் ஆயிரம் டன் கடலில் கசிந்தது அங்குள்ள பகுதி முழுக்க பரவியது. இதனால் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பவளப்பாறைகள், மீன்கள் பாதிக்கப்பட்டன.
மொரீஷியஸ் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவும் கச்சா எண்ணெய் கசிவதை தடுக்க உதவிக்குழு அனுப்பியது. கப்பலில் மீதமிருந்த 3000 டன் கச்சா எண்ணெய் மாற்றப்பட்டது. தற்போது கப்பலின் கேப்டனான இந்தியாவைச் சேர்ந்த சுனில் குமார் நந்தேஸ்வர் மற்றும் துணைக் கேப்டன் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸ் அதிகாரி தெரிவித்து உள்ளார்.மேலும் அந்நாட்டு அரசு கப்பலுக்குச் சொந்தமான ஜப்பான் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளது.