நீட், ஜே.இ.இ., தேர்வுகளை நடத்த வேண்டுமென்று மாணவர்கள், பெற்றோர்கள் தான் கூறினர்: கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை விரைவில் நடத்தும்படி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து அதிகளவில் கோரிக்கைகள் வந்ததாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாத தொடக்கத்தில், ஜே.இ.இ., முதன்மைத் தேர்வும், வரும் 13-ம் தேதி நீட் தேர்வும் நடைபெற உள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில், இந்தத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என, மாணவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது:
நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை உடனடியாக நடத்தும்படி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து மத்திய அரசுக்கு அதிகளவில் கோரிக்கைகள் வந்தன. 85 சதவீத மாணவர்கள் தேர்விற்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
மாணவர்களின் நலனுக்கு எதிராக மத்திய அரசு ஒருபோதும் செயல்படாது. மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம். உள்துறை அமைச்சகம் வெளியிடும் வழிகாட்டுதல்கள் அடிப்படையில், பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.