பில் கேட்ஸ் அறக்கட்டளை ‘சீரம் ஆப் இந்தியா’ நிறுவனத்துக்கு அளிக்கும் நிதியை இரட்டிப்பாக்கியது..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறுகின்றன.
செல்வந்தர்கள் பலர் தடுப்பு மருந்து சோதனைக்காக நிதி அளித்து வருகின்றனர். இதில் முக்கியமானவர் அமெரிக்க தொழில் ஜாம்பவான் பில்கேட்ஸ். இவரது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் காவி (GAVI) மேக்ஸ் இன்க்., நிறுவனம் ஆகியவை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு அளிக்கும் நிதியை இரு மடங்காக்கி உள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் 20 கோடி தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் பயன்பாடு போக பிற வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கும் இந்த தடுப்பு மருந்துகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பில்கேட்ஸ் தொண்டு நிறுவனம் அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் நோய் தடுப்புக்கு நிதி அளித்து வருவது முன்னதாக வரவேற்பை பெற்றது. ஆஸ்ட்ரோசெனேகா, நோவாபாக்ஸ் இங்க்., ஆகிய நிறுவனங்களுக்கு கோவாக்ஸ் மருத்துவத் திட்டம் மூலமாக 2021 ஆம் ஆண்டு நடுவில், இந்த தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கோவாக்ஸ் தடுப்பு மருந்து திட்டத்தில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தவிர கிட்டத்தட்ட 150 நாடுகள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.