தகவல் தர மறுக்கும் மத்திய அரசு… கிடப்பில் போடப்பட்டுள்ள 2.2 லட்சம் ஆர்.டி.ஐ கோரிக்கைகள்…!

பல்வேறு மத்திய, மாநிலத் தகவல் உரிமை ஆணையங்களில் 2.2 லட்சம் ஆர்.டி.ஐ கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ், அரசுத் துறைகள் மற்றும் அரசு உதவி பெறும் துறைகளின் கீழ் பல்வேறு தகவல்களைப் பெற முடியும். இச்சட்டம் இயற்றப்பட்டு 15 ஆண்டுகளாகிறது. ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் கேட்கும் கேள்விகளுக்கு, சில அரசுத் துறை அலுவலர்கள் முறையாக பதிலளிப்பதில்லை. பல தருணங்களில், தெளிவற்ற மழுப்பலான பதில்களே கிடைக்கப்பெறுகின்றன. சில சமயங்களில், தனி நபர் தகவல் தர முடியாது எனக் கூறி நழுவுகின்றனர்.
இந்நிலையில், தற்போது வரை பல்வேறு மத்திய, மாநிலத் தகவல் உரிமை ஆணையங்களில் 2.2 லட்சம் ஆர்.டி.ஐ கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தன்னார்வ நிறுவனமான Satark Nagrik Sangathan மற்றும் பங்கு ஆய்வுகளுக்கான மையம் மேற்கொண்ட ஆய்வின்படி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நிலுவையில் இருக்கும் ஆர்.டி.ஐ கோரிக்கைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், இந்தியாவில் 29 தகவல் ஆணையங்களில் 9 தகவல் ஆணையங்கள் தலைமை தகவல் ஆணையர் இன்றிச் செயல்படுகின்றன. மத்திய தகவல் ஆணையமே கடந்த ஆகஸ்ட் 27 முதல் தலைமை இன்றிச் செயல்படுகிறது எனும் விவரமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.