மூணாறு நிலச்சரிவில் காணாமல் போன எஜமானரை தேடி அலையும் நாய்!

மூணாறு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தன்னை வளர்த்தவரை காணவில்லை என ஒரு நாய் அப்பகுதியில் தேடி அலைவது காண்போரை கண்ணீர் சிந்த வைக்கிறது.
கடந்த வாரம் நள்ளிரவில் கேரளா மாநிலம் மூணாறு அருகே பெட்டி முடிப் பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நிலச்சரிவு ஏற்பட்டது.
தூங்கிக் கொண்டிருந்த 60-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி மாயமாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அப்பகுதியில் இன்னமும் 15 உடல்கள் புதைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை தேடும் பணி நடக்கிறது.
இந்நிலையில் இந்த நிலச்சரிவு சம்பவத்தில் தனது எஜமானரின் குடும்பத்தை முழுமையாக தொலைத்த செல்ல பிராணியான நாய் ஒன்று அந்த பகுதியை விட்டு செல்லாமல் அங்கேயே முகாமிட்டு எஜமானரின் குடும்பத்தை தேடிவருகிறது. ஒவ்வொரு முறையும் சடலங்கள் மீட்கப்படும் பொழுது அந்த இடத்திற்கு ஓடிச் சென்று பார்ப்பது அங்கிருப்பவர்களை கண்ணீர் சிந்த வைக்கிறது.
ஆதிமனிதனுடனிருந்தே நட்பு பாராட்டி வரும் நாயன்பு தாயன்புக்கு இணையானது என்பதை மற்றொரு சம்பவம் உணர்த்தியுள்ளது.