நீட் தேர்வில் முறைகேடு.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!! மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகக் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்வீர்சிங், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவர் அளித்துள்ள புகாரில், தனது விடைத்தாள்களில் அவரது பெயர் மற்றும் கையெழுத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதோடு விடைத்தாள் நகலை வாங்கி பார்த்த போது அவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. 672 மதிப்பெண்கள் வழங்குவதற்குப் பதிலாக வெறும் 354 மதிப்பெண்கள் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. இது போன்று பல்வேறு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்திலும் இது போன்ற ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மாணவி ஸ்ரேயா 720 மதிப்பெண்களுக்கு வெறும் 252 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இணையத்தில் வெளியிடப்பட்ட தனது ஓ.எம்.ஆர் விடைத்தாளினை பார்த்தபோது அவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.
தேர்வு எழுதும்போது ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதிலளிக்காமலிருந்த நிலையில், தற்போது பதினோரு கேள்விகளுக்குப் பதிலளிக்காதது போல விடைத்தாளில் இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாணவியின் அசல் விடைத்தாளைச் சமர்ப்பிப்பது குறித்து தேசிய தேர்வு முகமை மற்றும் சி.பி.எஸ்.இ பதிலளிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் குஜராத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசும், தேசிய கல்வி வாரியமும், சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரும் பதிலளிக்க உத்தரவிட்டார். இந்தாண்டு வெளியான நீட் தேர்ச்சி விகித பட்டியலிலும், நீட் தேர்வு விடைத்தாள் திருத்துவதிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக, நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.