மனைவி இறந்த சோகம் தாங்காமல் உயிரை விட்ட அன்பு கணவர்!!

மனைவி இறந்த சோகத்தில் கணவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாகை மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் தனது வீட்டின் அருகே டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி பத்மா (வயது 40). இத்தம்பதிக்கு 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் ஒருவருக்கு மட்டுமே திருமணம் ஆன நிலையில் மற்ற அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், மனைவி பத்மா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். எனினும் அவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இறந்துள்ளார்.
இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த கணவர் குமாரும் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மனைவி இறந்த துக்கத்தில் கணவன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.