“‘பசுவதைத் தடுப்பு சட்டம்’ அப்பாவி மக்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது” – அலகாபாத் நீதிமன்றம்

உத்தரபிரதேச அரசாங்கத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி வரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (National security act – NSA) கீழ் மாநிலத்தில் 139 வழக்குகள் பதிவு செய்யப்படிருக்கின்றன. அதில், 76 வழக்குகள் பசுவதைத் தடுப்பு சட்டத்தின் (1955) அடிப்படையில் பதிவாகியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகக் காவல்துறை, ஆதாரங்களை சேகரிக்கத் தவறியதால் 32 வழக்குகளை தள்ளுபடி செய்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உ.பி. அரசின் தரவுகள் சொல்கின்றன.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி, உத்திர பிரதேச மாநிலம், ஷாம்லியில் மாட்டிறைச்சி விற்பனை செய்ததாக ரஹ்முதீன் என்பவர் பசுவதைத் தடுப்பு சட்டத்தின் 3, 5 மற்றும் 8 ஆகிய உட்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். ரஹ்முதீனின் ஜாமீன் மனு அலகாபாத் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, நீதிபதி சித்தார்த், `பசுவதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவாகும் இதுபோன்ற வழக்குகளில், காவல்துறை சமர்ப்பிக்கும் ஆதாரங்களில் நம்பகத்தன்மை இல்லை. இந்த சட்டம் அப்பாவி மக்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது’ என்று கருத்துத் தெரிவித்தார்.
`பறிமுதல் செய்யப்படும் இறைச்சிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பே, அது மாட்டிறைச்சி என்ற முடிவுக்கு போலீஸார் வருகிறார்கள். பல நேரங்களில் கைப்பற்றப்பட்ட இறைச்சிகளை பரிசோதனைக்கு அனுப்புவதே இல்லை. இச்சட்டத்தால் அப்பாவி பொதுமக்கள் பலர் தண்டிக்கப்படுகிறார்கள்’ என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.