உ.பியில் தொடரும் அதிர்ச்சி.. இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் ஆன்லைன் உதவித்தொகை பெறுவதற்காக சந்தைக்கு சென்ற பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கிழக்கு உ.பி.யின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையுடன் ஆன்லைன் உதவித்தொகை பெறுவதற்கான படிவத்தை நிரப்ப சந்தை பகுதிக்கு சென்ற 18 வயது இளம்பெண்ணின் உடல் 22 மணி நேரத்திற்குப் பிறகு, அந்த கிராமத்தின் வறண்ட குளத்தில் கிடப்பது தெரியவந்தது. கொல்லப்பட்ட பெண்ணின் தந்தையும், உடலைப் பார்த்த பிற கிராமவாசிகளும் அந்த பெண்ணின் கழுத்துப் பகுதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டதாகவும், அவரது இடது காலின் ஒரு பகுதி விலங்குகளால் கடித்து குதறப்பட்டதாகவும் கூறினர். அவரது மதிப்பெண் தாள் மற்றும் மொபைல் போன் அவரின் உடலுக்கு அருகிலேயே கிடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு அந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளதாகவும், கொலையாளிகளைத் பிடிப்பதற்காக காவல்துறை மூன்று குழுக்களை அமைத்துள்ளதாகவும் போலீஸ் சூப்பிரண்டு சத்யேந்திர குமார் தெரிவித்தார். சுமார் 2,000 பட்டியல் சமூக குடும்பங்கள் வசிக்கும் அக்கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
லக்கிம்பூர் கிரி மாவட்டத்தில் பதினைந்து நாட்களுக்குள் பட்டியல் சமூக பெண்பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன.