கடமை தவறாமல் பணியாற்றிய பெண் காவல் ஆய்வாளருக்கு மரியாதை செய்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்!

கடமை தவறாமல் பணியாற்றியதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரிக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மகேஸ்வரி. இவர் இந்த ஆண்டு பாளையங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு இவருடைய தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில், இவரது தந்தை திண்டுக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 14அன்று இரவே உயிரிழந்தார். இது தெரிந்தும் அதிகாரிகள் யாரிடமும் இந்த தகவலை தெரிவிக்காமல், கடமை தவறாமல் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் அணிவகுப்பு நிறைவு பெற்ற பின், தன்னுடைய தந்தையின் இறுதிச்சடங்கிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இவரது இந்த செயலுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்த நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுதந்திர தின விழாவில் தேசப்பற்றுடன் கடமை தவறாமல் பணியாற்றிய காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரிக்கு,நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.