முதல்வருக்கு கொரோனா? தகவலால் பரபரப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் தங்கமணி உடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் முதல்வருக்கு பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாகப் பரவும் கொரோனாவுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுபோலவே முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரான வளர்மதிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வருக்கும் மிகவும் நெருக்கமான மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னை தலைமைச் செயலக நிகழ்வில், நிவாரண பணிக்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், 5 கோடி ரூபாய் காசோலையை, அமைச்சர் தங்கமணி நேரில் வழங்கினார். அதில் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் துறைசார்ந்த உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சிக்கு அடுத்த நாளே, தங்கமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிகாரிகள் தனிமைப்படுத்திக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா டெஸ்ட் எடுப்பதற்கு சுகாதாரத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.