மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கப்படாது என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!
மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மணல் கடத்தலில் சிக்கிய 15 பேர் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.இதனை விசாரித்த நீதிபதி, மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க இயலாது. முன் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாக கூறினார்.
சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கவில்லை என்றால், கீழ் நீதிமன்றங்களில் முன் ஜாமீன் பெறுவார்கள் என்று குற்றவியல் வழக்குரைஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மணல் கடத்தல் வழக்கில் சிக்கி முன்ஜாமீன் கேட்டு தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் இன்று விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும், அப்போது விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, “தமிழகம் முழுவதும் முன் ஜாமீன்கோரி 40 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. முன் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் மணல் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 மனுக்கள் முன் ஜாமீன் வழங்கக்கோரி விசாரணைக்கு வருகின்றன. இதனால், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கட்டாயம் முன் ஜாமீன் வழங்க இயலாது” என்று தீர்ப்பளித்து நீதிபதி உத்தரவிட்டார்.