பிரபலங்களை வைத்து பதிலளிப்பதா? காங்கிரஸ் கண்டனம்

விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பதிலளிப்பதற்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில் விவசாயிகள் போராடி வரும் சூழலில், விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்க பாடகி ரிஹானா, சுவீடன் நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ‛விஷயம் தெரியாமல் பேச வேண்டாம்; கிளர்ச்சியை துாண்டும் வகையில் செயல்பட வேண்டாம்’ என தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் உட்பட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் பலரும் வெளிநாட்டினர், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு காங்., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியப் பிரபலங்களை மேற்கத்திய நாடுகளுக்குப் பதிலளிக்க வைத்தது பெரும் தர்ம சங்கட நிலையை ஏற்படுத்துகிறது. மத்திய அரசின் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கை காரணமாக சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பம் சேதமாகியுள்ளது. இதை கிரிக்கெட் வீரர்களின் டுவீட்களால் சரி செய்ய முடியாது. எனப் பதிவிட்டிருந்தார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் டுவிட்டர் பதிவில் மனித உரிமை மற்றும் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்னைகள் தேசங்களுக்கு அப்பாற்பட்டது. பிறகு ஏன் மியான்மரில் ராணுவத்தால் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு, அமெரிக்க பார்லிமென்ட் தாக்குதல் ஆகியவை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் கவலை தெரிவித்தது? என கேள்வியெழுப்பியுள்ளார்.