பாட்னாவில் தடுப்பூசி சோதனை

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தான, கோவாக்சினின் சோதனை, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 18 தன்னார்வலர்களுக்கு செய்யப்பட்டது.
ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைராலஜி மையம் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்துடன் இணைந்து, ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.
முதல்கட்ட பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில், இந்த மருந்தை மனிதர்களுக்கு அளித்து பரிசோதிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான பணிகள் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 18 தன்னார்வலர்களுக்கு துவங்கியது.
18 முதல் 55 வயதுக்கு உற்பட்ட 18 தன்னார்வலர்கள் கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்ய தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்ட பின், 3 மணி நேரம் அவர்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்துள்ளனர். பின் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். 14 நாட்களுக்கு பின் அவர்களுக்கு 2வது டோஸ் போடப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையை நடத்த ஐ.சி.எம்.ஆர் தேர்ந்தெடுத்த 12 நிறுவனங்களில் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையும் ஒன்று. முதல்கட்டமாக 2 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளதாக, அதன் தயாரிப்பு நிறுவனமாக பாரத் பயோடெக் கூறியுள்ளது.