ஐபில் 2020:பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் அணி..

ஐ.பி.எல். தொடரில் ராகுலின் அதிரடியான சதத்துடன் பஞ்சாப் அணி 206 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய கோலி தலைமையிலான பெங்களூர் அணி 97 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல்.லின் 6 ஆவது போட்டி நேற்றைய தினம் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை பஞ்சாப்பிற்கு வழங்கியது.

அதன்படி பஞ்சாப் அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ராகுலும், மாயங்க் அகர்வாலும் களமிறங்கி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் பஞ்சாப் அணி 6 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 50 ஓட்டங்களை குவித்தது.

இதன் பின்னர் அகர்வால், 6 ஆவது ஓவரில் சஹாலின் பந்து வீச்சில் 26 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழக்க, நிகோலஷ் பூராண் களமிறங்கினார்.

எனினும் அவர் 13.1 ஆவது ஓவரில் சிவம் டூப்பின் பந்து வீச்சில் டிவில்லியர்ஸுடம் பிடிகொடுத்து 17 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து வந்த மெக்ஸ்வெலும் நீண்ட நேரம் நிலைத்திருக்காது 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

4 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய கருண் நாயருடன் கைகோர்த்த ராகுல் தொடர்ந்தும் அதிரடி காட்டி வந்தார். இதனால் பஞ்சாப் அணி 18 ஓவர்களின் நிறைவில் 157 ஓட்டங்களை குவித்தது.

இந் நிலையில் 19 ஆவது ஓவரை எதிர்கொண்ட ராகுல் முதல் பந்தில் சிக்ஸரையும், அடுத்த பந்தில் பவுண்டரியையும் விளாசி மொத்தமாக 62 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கலாக அதிரடியாக சதம் பெற்றார்.

விராட் கோலி 17 மற்றும் 18 ஆவது ஓவர்களில் ராகுலின் இரு கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டமையும் அவருக்கு சாதகமாக அமைந்தது.

19 ஆவது ஓவரை மொத்தமாக எதிர்கொண்ட ராகுல் அந்த ஓவரில் மாத்திரம் 26 ஓட்டங்களை குவித்தார்.

இறுதியாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 206 ஓட்டங்களை குவித்தது.

ராகுல் 69 பந்துகளுக்கு 7 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடங்கலாக 132 ஓட்டங்களுடனும், கருண் நாயர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் பெங்களூர் அணி சார்பில் சிவம் டூப் 2 விக்கெட்டுக்களையும், சாஹல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 207 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அதிர்ச்சி காந்திருந்தது.

4 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பெங்களூர் அணி தடுமாறியது.

தொடர்ந்தும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறிய பெங்களூர் அணி 17 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 97 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

பெங்களூர் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் வாசிங்டன் சுந்தர் 30 ஓட்டங்களையும் ஏ.பி.டி. வில்லியர்ஸ் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மிரட்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் அஸ்வின் மற்றும் ரவி பிஸ்நோனி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இப் போட்டியில் வெற்றிபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 புள்ளிகளைப் பெற்றதுடன் ஆட்டநாயகனாக பஞ்சாப் அணியின் தலைவரும் துடுப்பாட்டத்தில் மிரட்டிய கே.எல். ராகுல் தெர்வு செய்யப்பட்டார்.

இன்று 25 ஆம் தேதி துபாயில் இடம்பெறும் 7 ஆவது போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டில்லி கெபிட்டல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ளவுள்ளன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x