பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 12 வயது சிறுமிக்கு நீதிகேட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று சலூன் கடைகள் அடைப்பு!!

திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல இடங்களில் சலூன் கடைகளை அடைத்து முடிதிருத்துவோர் போராட்டம் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே சவரத் தொழிலாளியின் மகள் பாலியல் வன்கொடுமை கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி கடந்த 29 ஆம் தேதி விடுவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
திண்டுக்கல் மாவட்டம் குரும்பட்டியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி வெங்கடாசலத்தின் 12 வயது மகள் கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கிருபானந்தன் (17) என்பவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கிருபானந்தன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதை தொடர்ந்து சிறுமியின் கொலைக்கு காரணமான இளைஞரை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி தமிழ்நாடு முழுவது முடிதிருத்துவோர் கடை அடைத்து போராட்டம் செய்து வருகின்றனர்.