டி.வி.சேனல்களுக்கு எதிராக டில்லி ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள பாலிவுட் பிரபலங்கள்!!

பாலிவுட்டில் போதை மருந்து விவகாரம் தொடர்பாக அவதூறாக செய்தி வெளியிடுவதாக ஒட்டு மொத்த பாலிவுட் பிரபலங்கள் ஒரணியில் திரண்டு டி.வி. சேனல்கள் மீது டில்லி ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைதான அவரது காதலி ரியா உள்ளிட்டோர் கைதாகியுள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் பலரும் போதை மருந்து பயன்படுத்துவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து இந்த விவகாரத்தை கடந்த சில மாதங்களாக முன்னணி ஆங்கில டி.வி. சேனல்கள் தொடர் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.. ஏற்கனவே ரிபப்ளிக் டி.வி. பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது டில்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பாலிவுட் நடிகர்கள், ஷாரூக்கான், சல்மான்கான், கரன்ஜோகர், ஆமீர்கான், அஜய்தேவ்கான், அக்சய்குமார், அனில்கபூர், நடிகைகள், அனுஷ்கா ஷர்மா, தியா மிர்ஷா, ஜோயா அக்தர், உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் பாலிவுட்டின் 34 படத்தயாரிப்பாளர்கள், முன்னணி ஆங்கில டி.வி. சேனல்களான ரிபப்ளிக் டி.வி.யின் அர்னாப் கோஸ்வாமி, பிரதீப் பண்டாரி, டைம்ஸ்நவ் டி.வி. சேனலின் ராகுல் சிவசங்கர், நவீ்ன்குமார் ஆகிய பத்திரிகையாளர்கள் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் இரு அவதூறு வழக்குகள் தொடந்துள்ளனர்.
அதில் பாலிவுட் பிரபலங்கள் பற்றி அவதூறான, மிகவும் இழிவான செய்தியையும், தவறான தகவல்களையும் வெளியிட்டு பாலிவுட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.