பாலியல் துன்புறுத்தலால் ஓடும் காரில் இருந்து குதித்து படுகாயமடைந்த இரண்டு பெண்கள்!!

பஞ்சாபின் அமிர்தசரஸில் கால்டாக்ஸி ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தல் செய்ததால் ஓடும் காரில் இருந்து குதித்து இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பகுதியின் ரஞ்சித் அவென்யூ வட்டாரத்திலுள்ள ஒரு உணவகத்திற்குச் செல்வதற்காக மூன்று பெண்கள் நேற்று மாலையில் வாடகைக்கு கார் எடுத்துள்ளனர். “டாக்ஸி செல்லும் போது, அதன் டிரைவர் மூன்று பெண்களில் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ய தொடங்கினார். இதனை அவர்கள் எதிர்த்ததால், அவர் வாகனத்தின் மிக வேகமாக ஓட்ட தொடங்கினார். இதனால் ஓடும் காரில் இருந்து இரண்டு பெண்கள் குதித்தனர்” என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
“சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சிலர், இரண்டு பெண்கள் ஓடும் வாகனத்தில் இருந்து வெளியே குதிப்பதை பார்த்தார்கள். உடனடியாக அவர்கள் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்று தடுத்து, வாகனத்தில் இருந்த மற்றுமொரு பெண்ணை மீட்டு வந்தார்கள்” என்றும் அவர் கூறினார். வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவரை காவல்துறை கைது செய்தது.