டோர் டெலிவரி செய்யும் பெண் ஊழியர் மோசடி செய்துவிட்டு சிட்டாக பறந்தவர் கேமராவில் சிக்கினார்!!

கொரோனா தொற்று பரவியுள்ள காலகட்டத்தில் சமைக்க சோம்பேறித்தனம்பட்டோ அல்லது ஒரு முறை பணம் செலவிடலாம் என விரும்பியோ, வீட்டில் இருந்தபடி தங்கள் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்கின்றனர். அதிலும், டெலிவரி செய்யும் நபரிடம் இருந்து நேரிடையாக பொருட்களை கைகளில் வாங்கினால் ஆபத்து என முன்னெச்சரிக்கையாக அதனை தவிர்க்கும் வகையில் ஆப்சனை தேர்வு செய்கின்றனர்.
இதன்படி, வாடிக்கையாளரின் இடத்தில் உணவு பொருட்களை வைத்து விட்டு, டெலிவரி செய்து விட்டதற்கு அடையாளம் ஆக அதனை ஊழியர் புகைப்படம் எடுத்து விட்டு சென்று விடுவார். பின்னர் வாடிக்கையாளர் வந்து, ஆர்டர் செய்த தனது பொருளை எடுத்து செல்வார். இதனால் டெலிவரி செய்யும் ஊழியருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையேயான தொடர்பு குறைகிறது. இந்த முறையை ஊழியர் ஒருவர் தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளார். அமெரிக்காவில் உணவு வினியோகம் செய்யும் இதுபோன்ற நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர் ஒருவர் உணவு பொருளை வாடிக்கையாளர் வீட்டின் முன் வைத்து விட்டு, பின்னர் அடையாளத்திற்காக அதனை புகைப்படம் எடுத்து கொள்கிறார். இதன் பின்னர் மீண்டும் வந்து அந்த உணவு பொருளை கையோடு எடுத்து கொண்டு சென்று விடுகிறார்.
ஆனால், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் இந்த காட்சி பதிவாகி இருக்கிறது. வாடிக்கையாளருக்கு பசி ஒருபுறம் இருக்க, தன்னை ஏமாற்றிய பெண் ஊழியர் பற்றி மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதனால், வீடியோ பதிவை டிக்டாக்கில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்து லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு உள்ளனர். தங்களது அதிர்ச்சியையும் பதிவிட்டு வருகின்றனர். டிக்டாக்கில் வெளியான இந்த பதிவை 1 கோடிக்கும் மேலானோர் பார்வையிட்டுள்ளனர்.அந்த தனியார் நிறுவனம், இதுபோன்ற முறையற்ற அணுகுமுறையை நாங்கள் சகித்து கொள்வதில்லை. அந்த ஊழியரை கண்டறியும் பணியில் உள்ளோம். உடனடியாக அவரை வெளியேற்றுவோம் என கூறியது.
ஆனால், வீடியோவை டிக்டாக்கில் வெளியிட்ட வாடிக்கையாளருக்கு இன்னும் எந்தவித தகவலும் வரவில்லை என கூறப்படுகிறது.