மூளை அறுவை சிகிச்சை செய்துள்ள பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடம்!

84 வயதாகும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு திங்களன்று மூளை அறுவை சிகிச்சை நடந்தது. கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டுள்ள அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டில்லி ராணுவ மருத்துவமனை கூறியுள்ளது.
டில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் திங்களன்று நண்பகல் பிரணாப் முகர்ஜி அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் ரத்தம் உறைந்திருப்பதால் உயிர் காக்கும் அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் கூறினர். அறுவை சிகிச்சைக்கு முன் நடந்த பரிசோதனையில் கொரோனா இருப்பதும் தெரிய வந்தது.
நேற்று மாலை அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் இன்னமும் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என மருத்துவமனை கூறியுள்ளது. சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.