வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த பெண்.. உறவினர்கள் சாலை மறியல்!!

ஊத்தங்கரை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி கிராமத்தை சேர்ந்த மணி என்பவரது மகள் உதய நிலா (19) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அத்தியப்பன் என்பவரது மகன் மாதேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் மாதேஷ் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி வரதட்சணை கேட்டு உதயநிலாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு ஏக்கர் நிலம் பங்காக வாங்கி வந்தால் மட்டுமே வீட்டிற்கு வர வேண்டும் என்றும் இல்லையென்றால் வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அம்மா வீட்டுக்கு வந்த உதயநிலா திங்கள்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனக் கூறினர்.

பெண்ணின் இறப்பிற்கு காரணமான கணவன், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் , இதனால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை காவலர்கள், பேச்சுவார்த்தை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதின் பேரில் கலைந்து சென்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x