கொரோனாவிலும், இந்து-முஸ்லிம் பாகுபாடு

குஜராத் மாநிலம் அஹமதாபாத் அரசு மருத்துவமனையில், இந்து மற்றும் முஸ்லீம்கள் என்று பாகுபாடுபடுத்தி, கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசாங்க முடிவின்படி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் குன்வந்த் ரதோட் தெரிவித்துள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நாளிதழின் செய்திப்படி, அங்கு பணியாற்றும் டாக்டர் குன்வந்த் ஹெச் ரதோட், “மாநில அரசாங்க முடிவின்படி, ஒரு வார்டு இந்து நோயாளிகளுக்கும் மற்றொரு வார்டு முஸ்லிம் நோயாளிகளுக்கும் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் என்று இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 186 பேர்களில் 150 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் நோயாளிகள். இந்த 150 பேர்களில் 40 பேர் முஸ்லிம்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குஜராம் மாநில துணை முதல்வர் நிதின் படேல், “மத நம்பிக்கை அடிப்படையில் வார்டுகள் பிரித்திருப்பது பற்றி எனக்கு தெரியவில்லை. பொதுவாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வார்டுகள் உள்ளன. நான் இந்த விவகாரத்தைப் பற்றி விசாரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.