“பிரதமரை வரவேற்க முதல்வர் வரத் தேவையில்லை”; கொதித்தெழுந்த தெலுங்கானா முதல்வர்..

பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாம் எனப் பிரதமர் அலுவலகம் கூறி இருப்பதற்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்துவதற்காக அகமதாபாத், புனே, ஐதராபாத் நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமரின் தனி செயலாளர் விவேக் குமார் மாநில தலைமை செயலாளர் சோமேஷ்குமாருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:
ஐதராபாத்தில் உள்ள ஹக்கிம்பேட்டை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில முதல்வர் சந்திரசேகரராவ் வர தேவையில்லை. தலைமை செயலாளர் டிஜிபி மகேந்தர்ரெட்டி, சைபராபாத் கமிஷனர் சஜ்ஜனார், மற்றும் மேட்சல் மாவட்ட கலெக்டர் ஸ்வேதா மொஹந்தி உள்ளிட்ட ஐந்து பேர் மட்டும் போதுமானது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்து இருப்பதாவது:
ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வருகிறார் என்றால் முறைப்படி முதல்வர் நேரில் சென்று வரவேற்பு அளிப்பது கடமை. ஆனால் ஐதராபாத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர் வர வேண்டாம் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து செய்தி வந்துள்ளது. ஜனநாயக நாட்டில் பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாம் என கூறுவது வரலாற்றில் முதன்முறையாக உள்ளது.என தெரிவித்து உள்ளார்.