சிறை வார்டன் உட்பட மூவர் கொலை.. வேலூரை அதிரவைத்த தொடர் கொலைகள்!!

வேலூரை அடுத்துள்ள அரியூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் காமேஷ் (29). நேற்று இரவு ஊசூர் சாலையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த காமேஷை, காரில் வந்த கும்பல் திடீரென வழிமறித்தது. காமேஷ் சுதாரிப்பதற்குள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் காரில் ஏறித் தப்பியது. பலத்த வெட்டுக்காயம் விழுந்ததில், காமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்துவந்த அரியூர் போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கிய நிலையில், அரியூர் புலிமேடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரின் சடலங்கள் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. போலீஸார் அந்தப் பகுதிக்கு விரைந்துச் சென்று பார்வையிட்டனர். கொலை செய்யப்பட்டவர்கள், சென்னை புழல் சிறையில் வார்டனாகப் பணிபுரிந்து வந்த தணிகைவேல் (26) மற்றும் திவாகர் (25) எனத் தெரியவந்தது. இவர்களது உடல்களும் பிரே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையில், நேற்று இரவு கொலை செய்யப்பட்ட காமேஷும், இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட இருவரும் நண்பர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களது நண்பரான வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், அரியூரைச் சேர்ந்த ரௌடி ராஜா என்கிற எம்.எல்.ஏ ராஜாவும், அவரது கூட்டாளிகள் சிலரும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட திவாகர் மற்றும் சிறை வார்டன் தணிகைவேல் ஆகிய இருவரையும்தான் முதலில் வெட்டி சாய்த்துள்ளனர். இருவரின் கதையையும் முடித்தப் பின்னர், வரும் வழியில் காமேஷை கொன்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக, ரௌடி ராஜா உட்பட 7 பேர் கும்பலைப் பிடித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள்.