சென்னையில் வாகன சோதனையின் போது காவலரின் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற பலே திருடர்கள்!!

சென்னையில் வாகன சோதனையின் போதுபோக்குவரத்து காவலரின் இருசக்கர வாகனம் மற்றும் மதுகுடித்திருப்பதை சோதனை செய்யும் கருவியை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் மேம்பாலம் அருகே செம்பியம் காவல்நிலைய போக்குவரத்து காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை உதவி ஆய்வாளர் பாலமுரளி மடக்கி பிடித்துள்ளார்.
அவர்கள் இருவரும் உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனம் அருகே நின்றிருந்தனர். அப்போது மற்றொரு வாகனத்தை மடக்கி பிடிக்க காவலர் பாலமுரளி சென்றுள்ளார். இந்த இடைப்பட்ட நேரத்தில், காவலர் பாலமுரளியின் இருசக்கர வாகனத்தையும் மதுகுடித்திருக்கிறார்களா என சோதனை செய்யும் கருவியையும் அந்த நபர்கள் திருடிச் சென்றனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் பாலமுரளி, செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.