செக்யூரிட்டி வேலைக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் – மத்திய அரசு

ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் பெறக்கூடிய செக்யூரிட்டி வேலைக்கு குறைந்தபட்ச ஆங்கில எழுத்துக்கள் தெரிய வேண்டும், 100 மணி நேர வகுப்பறை பயிற்சி, 60 மணி நேர களப்பயிற்சி ஆகியவை கட்டாயம் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விவசாயம் பொய்த்து போய் வேறு வேலைக்கு செல்ல முடியாதவர்கள் செக்யூரிட்டிகளாக பல்வேறு நகரங்களில் பணிக்கு சேர்கிறார்கள். இவர்களுக்கு செக்யூரிட்டி நிறுவனங்கள் சம்பளமாக சொற்ப தொகையையே வழங்குகின்றன. அதற்கு ஏற்றப்படி 50 வயதை கடந்தவர்கள் தான் பெரும்பாலும் இவ்வேலைகளில் சேர்கிறார்கள்.
சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகபட்சம் ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. இந்நிலையில் செக்யூரிட்டி பணிகளுக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வியாழனன்று அமல்படுத்தியுள்ளது. அதில் குறைந்தபட்ச சம்பளம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
செக்யூரிட்டியாக பணிபுரிய, 160 செ.மீ., உயரம், அதற்கேற்ற எடை, 80 செ.மீ.,
மார்பளவு இருக்க வேண்டும். நல்ல கண்பார்வை, நிறங்களை அடையாளம் காணும் திறன் இருக்க வேண்டும்.
செக்யூரிட்டிகளுக்கு குறைந்தபட்ச ஆங்கில எழுத்துக்கள், எண்களை அடையாளம் காணும் திறன் இருக்க வேண்டும்.
உடல் தகுதி, சொத்துகள் குறித்த அறிவு, தீயணைப்பு பயிற்சி, கூட்டத்தை கட்டுப்படுத்தும் பயிற்சி, அடையாள அட்டைகள் சரிபார்ப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
முன்னாள் போலீசாருக்கு, 40 மணி நேர வகுப்பறை பயிற்சியும், 16 மணி நேர களப் பயிற்சியும் அளிக்க வேண்டும்.
புதிதாக சேருபவர்களுக்கு 100 மணி நேர வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேரம் களப் பயிற்சியும் அளிக்க வேண்டும்.
வெடிகுண்டுகளை அடையாளம் காணும் பயிற்சி, முதலுதவி, அவசர கால நிர்வாகம், போலீஸ் அதிகாரிகளை பதவிக்கேற்ப அடையாளம் காணும் பயிற்சியும் அளிக்க வேண்டும். இவ்வாறு விதிமுறைகளில் உள்ளது.