“வீடியோவை அனுப்பவா”? .. மிரட்டிய நபர்.. தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி!!

சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிடுவதாக மிரட்டியதால் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், புதுக்கோட்டை அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு, காணாமல் போன அந்த இளம்பெண் குறித்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டு அருகே உள்ள கிணற்றிலிருந்து அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இறப்பதற்கு முன் அந்த பெண் எழுதிய கடிதத்தில், தமது தற்கொலைக்கு காரணமான நபர் குறித்தும், அவரிடமிருந்து பல பெண்களை காப்பாற்றுமாறும் குறிப்பிட்டு இருந்தார். உயிரிழந்த பெண்ணின் செல்போனை ஆராய்ந்தபோது, அதில் ஒரு எண்ணிடமிருந்து வீடியோவை அனுப்பவா? என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததும், அதற்கு அந்த பெண் “ப்ளீஸ் வேண்டாம், அழித்து விடு” என கெஞ்சும் வகையில் பதில் அளிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், இளம்பெண்ணை மிரட்டிய நபரை தேடி வருகின்றனர்.