பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ள இந்திய ரயில்வே!

பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை அதிகரிக்க மத்திய ரயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரிய தலைமை நிர்வாகி வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரயில்வே வாரிய தலைமை நிர்வாகி வி.கே.யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “ரயில்வே அமைச்சகம் இது தொடர்பாக விரைவில் அறிவிக்கை வெளியிடும். சில ரயில் நிலையங்கள் மேம்படுத்த வேண்டியுள்ளதால் பயணிகள் ரயில் கட்டணத்தையும், சரக்கு ரயில் கட்டணத்தையும் குறைந்த அளவில் உயர்த்த முடிவெடுத்துள்ளோம். கட்டணங்களை, அதாவது பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை உயர்த்துவதற்கான வழிமுறைகளை திட்டமிட்டுள்ளோம், கொஞ்சம் கொஞ்சமாக கட்டணங்கள் உயர்த்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கூறும்போது, “ஏப்ரல் 2023-ல் தனியார் ரயில் சேவை தொடங்கும். அவர்கள் கட்டணங்களை சுதந்திரமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் ரயில்வேயுடனும் போட்டியிட வேண்டும், சாலைப் போக்குவரத்துடனும் போட்டியிட வேண்டும். அதனால் அதிகக் கட்டணம் இருக்காது” என்றார்.
நிதி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் காந்த், “இந்தியாவில் பயணிகள் ரயில் கட்டணம் மானியம் மிக அதிகம். ஆகவே சரக்கு கட்டணம், பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது. இந்தியாவில் 70% சரக்குகள் சாலை வழியாகவே செல்கின்றன. எனவே இதில் சமநிலை தேவை. சரியான ஒரு சமநிலையை இதில் ஏற்படுத்துவது அவசியம்” என்றார்.