டெல்லியில் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு !!!!! (வீடியோ)
தலைநகர் டெல்லி அருகே உள்ள காசியாபாத் பகுதியில் தனது மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பத்திரிக்கையாளர் மீது மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் ஜோஷி என்ற அந்த பத்திரிக்கையாளர் நேற்று தனது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டு தனது இரண்டு மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் காசியாபாத் பகுதியில் உள்ள விஜய் நகர் பகுதியில் நேற்று இரவு வந்தபோது அவரை ஒரு கும்பல் பின் தொடர்ந்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் வேகத்தை விக்ரம் ஜோஷி அதிகரித்துள்ளார். அப்போது கடந்து சென்ற அந்த கும்பல் திடீரென அவரை வழி மறித்தது.
இதனால் நிலைதடுமாறிய விக்ரம் ஜோஷி கீழே விழுந்தார். இதனை அடுத்து சாலை ஓரத்தில் உள்ள ஒரு கார் அருகே இழுத்துச் சென்ற அந்த கும்பல் ஜோஷியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியது.
இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் ஜோஷியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் தலையில் குண்டு பாய்ந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அந்த மர்ம கும்பல் விக்ரம் ஜோஷியை சாலையில் இருந்து இழுத்துவந்து ஒரு காரின் அருகே வைத்து தலையில் சுடுவதும் அவர் சரிந்து விழுவதும் பதிவாகியுள்ளது. மேலும் அவரின் உடல் அருகே வந்த மூத்த மகள் அவரை பார்த்து கதறி அழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் ஐவரும் விக்ரம் ஜோஷியின் குடும்பத்தினருக்கு தெரிந்தவர்கள் என காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷியின் குடும்பத்தினர் தனது மருமகளை துன்புறுத்திய சிலர் மீது புகார் அளித்ததால் இதற்கு பழிவாங்குவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது