5 நாட்களில் 9 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமி

வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்ற 9 பேர் கொண்ட கும்பல் அவரை 5 நாட்களில் 3 முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அனைவரையும் கலங்க செய்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தினைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை சிறுமிக்கு தெரிந்த இளைஞர் ஒருவர் கடந்த ஜனவரி 4ம் தேதியன்று கடத்திச் சென்றுள்ளார். பின்பு அந்த இளைஞரும் அவரின் 6 நண்பர்களும் சேர்ந்து இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர்.
இரண்டு நாட்களுக்கு பின் சிறுமியை விடுவித்த அந்த கும்பல், கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் சிறுமி யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு பின்னர் அவரை பாலியல் வன்புணர்வு செய்த 7 பேரில் ஒருவன் மீண்டும் அச்சிறுமியை கடத்திச் சென்று காட்டுப் பகுதியிலும், சாலையோர கடை ஒன்றிலும் வைத்து அவனும் அவனது 3 நண்பர்களும் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். பின்னர் அச்சிறுமியை அந்த 3 பேரும் தங்கள் பிடியில் இருந்து விடுவித்தனர்.
ஆனால் அச்சிறுமிக்கு ஏற்பட்ட பயங்கரம் அத்துடன் முடிவடையவில்லை. வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை டிரக் டிரைவர்கள் இருவர் மீண்டும் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அவர்கள் பிடியில் இருந்து தப்பிய சிறுமி வீட்டுக்கு திரும்பி வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறையினர் இதுவரை சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 6 பேரை கைது செய்து அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.