கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு… மஹாராஷ்டிரா அரசுக்கு நெருக்கடி?

சுஷாந்த் சிங் மரணத்தை வைத்து பா.ஜ.க கூட்டணியில் உள்ள பீகாரின் நிதிஷ் அரசும், மத்திய அரசும் மஹாராஷ்டிரா அரசுக்கு நெருக்கடி தருகின்றன. அவர்களுடன் இந்துத்துவ ஆதரவாளரான கங்கனா ரனாவத்தும் இணைந்து நன்றாக விளம்பரம் தேடிக் கொள்கிறார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மும்பை போலீசுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார். கடந்த வாரம் உச்சகட்டமாக, மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போன்று இருப்பதாக கூறினார். மும்பை பாலிவுட் சினிமாவில் புகழடைந்துவிட்டு மும்பையையே கேவலமாக பேசும் கங்கனாவை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கூறினார்.
உடனே தன்னை நிஜ வாழ்க்கையிலும் கதாநாயகியாக கருதிக்கொண்டு செப்., 9-ம் தேதி மும்பைக்கு வருவேன் என வீர வசனம் பேசி வீடியோ வெளியிட்டார். அவரது தொடர் நடவடிக்கைகளை பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரியும், ஊரடங்கினால் சினிமா ஷூட்டிங் இல்லாமல் நான்கு சுவற்றுக்குள் இருப்பதனால் விளம்பரம் தேடிக்கொள்ள இப்படி பேசுகிறார் என்பது.
பின்னணியில் அவரை பா.ஜ.க., இயக்குகிறது என்ற சந்தேகமும் பலருக்கும் உண்டு. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்துவது போல், அவரது மும்பை பிரவேச அறிவிப்புக்கு ஆதரவு தெரிவிப்பது போல், ஒய்+ பாதுகாப்பு வழங்கி உள்ளது மத்திய உள்துறை.
தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்., எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவார் போன்றவர்களுக்கே சில மாதங்களுக்கு முன் ஒய்+ பாதுகாப்பை வாபஸ் பெற்ற மத்திய அரசு, ஒரு நடிகைக்கு சிறப்பு பாதுகாப்பு அளிப்பது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.