மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு.. இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்த நண்பர்கள்!!
மதுரையில் பொதுஇடத்தில் மது அருந்திய இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்த நண்பர்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் கூலபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். காய்கறி வியாபாரியான இவர் நேற்று முன்தினம் திருப்பாலை பகுதியில் உள்ள அரசு மதுபான கடை அருகே தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் போதையில் இருந்த மணிகண்டனை உடனிருந்த நபர்கள் தாக்கியதுடன் தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.
இதனையடுத்து தீயில் கருகிய நிலையில் கதறிய மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் 90 சதவித தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக மணிகண்டனுக்கும் அதே பகுதியை சேர்ந்த அழகர் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அழகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். பொது இடத்தில் மதுபோதையில் நடைபெற்ற தகராறில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.