இந்திய சேனல்களுக்கு தடை: அதிரடி காட்டும் நேபாள அரசு
இந்தியா மற்றும் நேபாள நாட்டிற்கும் இடையேயான மோதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சில இந்திய பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று கூறிய நேபாள அரசு, அப்பகுதிகளை தமது நாட்டு வரைபடத்துடன் இணைத்துக்கொண்டது. அதுமட்டுமின்றி, நேபாள-இந்திய எல்லையில் சாலை அமைக்கக் கூடாது என இந்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நேபாளத்தில் கொரோனா தொற்று பரவியதற்கு இந்தியாதான் காரணம் என்றும் குற்றச்சாட்டியது.
இந்நிலையில் நேபாளம் அரசுக்கு எதிராக இந்திய டி.வி. சேனல்கள் தவறான பிரச்சாரம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேபாள நாட்டில் நேற்று மாலையில் இருந்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.