‘தமிழக ஊடகங்கள் மீது அரசியல் தாக்குதல்…’ கருத்தரங்கத்துக்கு அழைப்பு
தமிழகத்தில், ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு, தொடர் இடையூறு விளைவிப்பதாக பா.ஜ.க மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிராக, ‘தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள்’ என்ற தலைப்பில், மூத்த பத்திரிகையாளர்கள் இணைந்து, இணைய வழி கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி நடத்தும் இந்த கருத்தரங்கு, வரும் 24-ம் தேதி காலை 11 மணி அளவில் ஜூம் செயலி வாயிலாக நடைபெற உள்ளது.
ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி தலைவர் என்.ராம் கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.

மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்ட் அமைப்பை சேர்ந்த ஆர்.ரங்கராஜ், யுவர் ஸ்டோரி தமிழ் ஆசிரியர் இந்துஜா ரகுநாதன், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தை சேர்ந்த அசீப் முகமது ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர். இதில் ஊடகவியலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ZOOM ID: 827 4523 1342, PASSWORD: democracy
இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியதாவது:
“சில ஆண்டுகளுக்கு முன், பா.ஜ.க. வின் அழுத்தத்தால், சன் டிவியில் இருந்து நெறியாளர் வீரபாண்டியன் வேலையை விட்டு நிறுத்தப்பட்டார். அதுமுதற்கொண்ட தங்களுக்கு சாதகமாக செயல்படாத பத்திரிகையாளர்களை குறிவைத்து பா.ஜ.க. இயங்கிவருகிறது,
அந்த வரிசையில், சமீபத்தில், நியூஸ் 18 தமிழ், நிர்வாக ஆசிரியர் குணசேகரன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், நியூஸ் 18 தமிழ் செய்தியாளர் ஹசீப் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்.
இதுதவிர, பா.ஜ.க ஆதரவாளர் மாரிதாஸ் என்பவர் கொடுத்த பட்டியலில் உள்ள பத்திரிகையாளர் பலர், வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர். இது இப்படியே போனால் நல்லதல்ல. இதற்கு எதிராக, ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி சார்பில் இந்த கருத்தரங்கு, வரும் 24-ம் தேதி காலை 11 மணி அளவில் ஜூம் செயலி வாயிலாக நடைபெற உள்ளது. ஜனநாயக ஆர்வலர்கள் இதில் பஙகேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.